மாமதுரையை போற்றுவோம்

மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்


மதுரை மாநகரின் தொன்மையை நினைவு கூர்ந்து இதன் பெருமையை உணர்ந்து நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வரும் தலைமுறைக்கு ஊட்டும் நோக்குடன் "மாமதுரை போற்றுவோம்" என்ற  விழா மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது. 
(குறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது)
  • மதுரையைப் போற்றுவோம்,
  • தொன்மையைப் போற்றுவோம்,
  • வைகையைப் போற்றுவோம் 
என மூன்று தலைப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.
நிகழ்ச்சிநிரல்:
பிப்.,3 காலை 7 மணிக்கு அரசரடி ரயில்வே மைதானத்தில் "மதுரைக் காகத்தான்' மாரத்தான் ஓட்டம் துவங்கும். பெரியார் பஸ்ஸ்டாண்ட், சிம்மக்கல் வழியாக தமுக்கம் வரை செல்லும் ஓட்டத்தில் 3 பிரிவினர் பங்கேற்பர். அவர்களுக்கு சான்றிதழ்கள், டி ஷர்ட் வழங்கப்படும். பெண்கள், சிறுவர்களுக்கு மீனாட்சி கல்லூரி வரையும், ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் வரையும் நடைபெறும். பிப்., 7ல், கிடாரிப்பட்டி சமணர் குகையில் இருந்து ஜோதி கொண்டு வரப்படும். கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மரீஸ் சர்ச், மீனாட்சி கோயிலில் வரவேற்பு அளிக்கப்படும். 
பிப்., 8ல் விழா துவங்கும். அன்று காலை தமுக்கம் மைதானத்தில் தீபம் ஏற்றப்படும். கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 
பிப்.,9ல், "தொன்மையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்தில் கருத்தரங்கு, மாலை 3 மணிக்கு மேல், "தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மதுரை கல்லூரியில் இருந்து கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் 9 வாகனங்கள், தெற்குவெளிவீதி, கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் வந்தடையும். பின், கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 
மூன்றாம் நாளான பிப்.,10ல், "வைகையை போற்றுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஆறு சுத்தம் செய்யப்படுகிறது. வைகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் "முப்பரிமாண மாதிரி' வைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் மக்கள் தீபம் ஏற்றுவர். 8 மணிக்கு மேல் வானவேடிக்கை, பின், 9.30க்கு தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றப்படும். 

மாமதுரை சிறப்பு ஏற்பாடுகள்:
விழாவைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த  அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் 3டி – முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலவாசல் கோட்டையின் மிச்சமுள்ள பகுதியில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.  விளக்குத்தூண் அருகில் பழந்தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவர் அடக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளியே கிளம்பும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

  
வைகையைப் போற்றுவோம்:
 3-ம் நாள் நிகழ்வான வைகையை போற்றுவோம் விழாவிற்கான பணி தற்போது வைகை ஆற்றில் நடைபெற்று வருகிறது. 
இங்கு வைகை ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எந்த வழியாக மதுரைக்கு வருகிறது, எப்படி கடலில் போய் சேருகிறது என்பதை மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், விளக்கும் வகையிலான முப்பரிமாண (3-டி) வடிவமைப்புகள் ஏற்பாடு செய்யும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 
மதுரை மக்கள், மாணவ, மாணவிகள் வைகை ஆற்றை பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளவும், தொன்மை வாய்ந்த இந்த வைகை ஆற்றை காப்பாற்றவும், பேணி பாதுகாக்கவும், இந்நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவும், தொடர்ந்து கன்றுகளை பராமரிக்கவும், லயன்ஸ் கிளப் பொறுப்பேற்றுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று கவனித்து வருகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்விழா மூலம் மதுரையின் புகழ் திக்கெங்கும் பரவவும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது

No comments: