God is life – உயிரே கடவுள்

உயிர் என்றால் என்ன?
உடலை இயங்க வைக்கும் எதோ ஒன்று,  இறப்பின் பின் அது இல்லை,  நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம் இல்லையேல் நாம் சவம்,  உடலும் உயிரும் சேர்ந்திருந்தால தான் பிரயோஜனம், பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை, உடலை விட உயிரே முக்கியமானது. உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.
பிறப்பு என்றால் என்ன?
ஒருவன் எப்படி பிறக்கிறான்? ஏன் பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன?   அதுதான் “தேவ ரகசியம்”.   ஆணும் பெண்ணும் சேர்ந்தால் உடனே  குழந்தை பிறந்து விடுமா? நடக்காது, அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.   இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  விஞ்ஞான வளர்ச்சியால், டெஸ்ட் ட்யூப் குழந்தை உருவானது. அதுவும் பல முயற்சிக்கு பின் குழந்தை உருவாகிறது.  விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே.  இன்றைய உலக வளர்ச்சிக்கு விஞ்ஞானத்தின் பரிணாமமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
இறப்பு என்றால் என்ன?
பூமியில் மனிதர்கள் எப்படி  எங்கிருந்து வந்தார்கள் எங்கே போனார்கள்,  பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள், பின் இறந்துபோயினர்.  இறந்து அவர்கள் போனது எங்கே? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே, அப்படியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையா?  உயிர் உள்ள  உடல் இருந்தால் பிரயோஜனம், உயிர் இன்றி உடல் இருந்தால் ஜடம்.  மனிதனுக்கு  உயிர்தான் பிரதானம்,  உயிர் தான் பிறக்கிறது உடலைக் கொண்டு,  உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம்.
நம் உடல் எப்படி வந்தது?
நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே. அன்னையின் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரம், அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் கருவாகி பிண்டம் உருவாகிறது.  மாதந்தோறும் வெளியாரும் உதிரத்தை தீட்டு என்கிறோமே, அப்படியானால்  நம் தாயின் தீட்டு தான் நாம்.  மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே. ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர்சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால் தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம். ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே இணைந்தாலே சக்தி பிறக்கும், இயக்கம் ஆரம்பமாகும்.
உயிர் எப்படி வந்தது
தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல் தான் உருவாகிறது, உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் மூன்று மாதத்திற்கு பிறகு வந்து சேர்க்கிறது,  இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் இறைவன் வகுத்து வைத்தது,   இதுவே தேவரகசியம்.  உயிர் இந்த காலத்தில் வருகிறது – வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிந்தவர் யாவரும் இல்லை.  உயிர் எங்கிருந்தது? எப்படி? உடலினுள் பிரவேசித்தது,  உடலில் எங்கு எந்த வடிவில் இருக்கின்றது? இதை அறிந்தவன் ஞானி, அவனே சித்தன்!!
இறைவன் செய்யும் அதிசயம்
ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே கணக்கு (27 நட்சத்திரங்களே 1 மாதம்). 10 மாதம் என்றால் 270 நாட்களே. பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி. கன்னிக்குடத்திலே  குளத்திலே மிதந்து கொண்டு,  தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சி வளரும் சிசுவை படைத்தவன் பரமன், தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன்.  நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இது போன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான். எல்லாம் அவனின் திருவிளையாடல்.
இறைவன் ஒருவனே
பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகின்றான்.  ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே.  எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன். எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான், எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே, மனிதனை படைக்கும் போது அவர் பிரம்மா, காக்கும்போது அவர் விஷ்ணு, அருள்புரியும் போது அவர் சதாசிவன்,  அவரே அழிக்கிறார் அப்போது அவர் ருத்திரன்.  ஆக இறைவனே எல்லாம் புரிகிறார்! எல்லாமே அவன் செயலே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே.
உயிரே கடவுள் 
இறைவன்  அண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவன்,  அணுவுக்குள் அணுவாக ஒளிர்பவன், மனித உடலினுள் பலகோடி அணுத் துகள்களில் இல்லாமலா  போவான், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”.  இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்.  “அகம்பிரம்மாஸ்மி”. இறைவன் தன்னை சிறுஜோதியாக குறுக்கிக் கொண்டு உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார். கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்,  கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் கடவுளை காண்பது அரிது.  கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் எளிதில்,   வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம் இறைவன் கூப்பிடு தூரத்தில் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள். நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்.
நம்மை நேசிப்போம் கடவுளை காண்போம்

No comments: